யானைகளை விரட்ட அகழி!
கர்நாடகா தரும் பலே தொழில்நுட்பம்...
சூளகிரி நகருக்குள்... யானைகள் அட்டகாசம்... மக்கள் பீதியில் ஓட்டம்'/
இப்படிப்பட்ட செய்திகள் அடிக்கடி வந்து கொண்டுதான் இருக்கின்றன. வனப்பகுதி தொடர்ந்து ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதால், தண்ணீரும், உணவும் கிடைக்காமல் இப்படி வனவிலங்குகள் ஊருக்குள் நடமாட ஆரம்பித்து விடுகின்றன.
வனத்தை விட்டு வெளியே வராமல், விலங்குகளைப் பாதுகாக்க முடியாதா? என்று கேட்கத் தோன்றுகிறதானே?
இதற்கு, "நிச்சயம் முடியும்" என்று நம்பிக்கையான பதிலை முன் வைக்கிறார் மைசூர் தமிழ்ச் சங்க துணைத்தலைவர் மற்றும் கர்நாடகா மாநில தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் புகழேந்தி. குண்டல்பேட் பகுதியில் கூட்டுப்பண்ணை நடத்தி வரும் இவர், ஏற்கெனவே நம் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான்.
"வனங்களைவிட்டு வெளியேறும் விலங்குகளைத் தடுக்க சூரிய மின்வேலி போதுமான அளவுக்குக் கைகொடுப்பதில்லை. அதனால், வேறு உத்திகளை கையாள்கிறது கர்நாடக வனத்துறை. அதாவது, வன எல்லையில் 12 அடி ஆழ அகழியைத் தோண்டுகிறார்கள். வனப்பகுதியில் இருந்து வந்தால், இந்த அகழிக்குள் இறங்கும் வகையில் சாய்தளமாகவும், விளைநிலங்களை ஒட்டியிருக்கும் பகுதியில் செங்குத்தாகவும் வலிமையானச் சுவரை எழுப்புகிறார்கள். அகழியின் அடித்தளத்தில் இருந்து 12 அடி உயரத்துக்கு எழுப்பப்படும் இந்தச் சுவற்றின் மீது, சூரிய மின்வேலியை அமைக்கிறார்கள். சாய்தளத்தின் வழியே அகழியில் யானைகள் இறங்க முடியும். ஆனால், அதன் பிறகு இருக்கும் செங்குத்தான சுவர் தடுத்து நிறுத்திவிடும். தும்பிக்கையை நீட்டினால்... சூரிய மின்வேலி தரும் அதிர்ச்சியால் பின்வாங்கிடும்.
அதனால் வந்த வழியிலேயே மீண்டும் வனத்துக்குள் சென்று விடும்.
அகழியில் தேங்கும் மழைநீர் வனவிலங்குகளுக்கு குடிநீர் ஆதாரமாக அமைவதுடன், ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கும் நீராதாரமாக இருக்கிறது. அதோடு, அகழியை ஒட்டியிருக்கும் வனப்பகுதியில் மரங்கள் செழித்து வளர்வதால் யானைகளுக்குத் தீனியாகவும் மாறிவிடுகிறது.
இத்தகைய அகழிகளை சாம்ராஜ்பேட் தாலூகாவில் அதிகளவில் அமைத்திருக்கிறார்கள். ஒரேகல்லில் பல விஷயங்களுக்கு தீர்வாக இருக்கும் இதுபோன்ற அகழிகளை தமிழக வனத்துறையும் முயற்சிக்கலாமே" என்று சொன்னார்.
தமிழக வனத்துறை கண்டு கொள்ளுமா?
- எஸ். ராஜாசெல்லம்
வெளியீடு : பசுமை விகடன், 10-4-11





